புதிய மாற்றங்களுக்கு உள்நாட்டு பின்னலாடை தொழில் தயாராகிறது. அடுத்த கட்ட வளர்ச்சிக்காக பாலியஸ்டர் ஆடை உற்பத்தி
- Repoter 11
- 10 Dec, 2025
திருப்பூரை சேர்ந்த உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும், பருத்தியுடன், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கால்பதிக்க தயாராகிவிட்டனர். பின்னலாடை நகரான திருப்பூர், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நூலிழை ஆடைகள் உருவாக்கம், உள்நாட்டு ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்கு அவசியமானதாகிவிட்டது. புதிய தொழில் நுட்பத்தில், கூடுதலாக பிராசசிங் செய்யப்படும் பாலியஸ்டர் துணி ஆடைகள், வியர்வையை நன்கு உறிஞ்சும் பருத்தி நூலிழைகளுக்கு இணையாக மாறுகின்றன. விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் வியர்வையை நன்கு உறிஞ்சும் பாலியஸ்டர் ஆடைகளையே அணிகின்றனர். மதிப்பு கூட்டிய பாலியஸ்டர் ஆடை உற்பத்தியில், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கால்பதிக்க வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அணிந்தால், பருத்தி ஆடைகள் போல் உணரப்படும் பாலியஸ்டர் ஆடை உற்பத்தி, சீனாவில் துவங்கிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் அத்தகைய ஆடைகளுக்கு வரவேற்பும் அதிகம் கிடைத்து வருகிறது. திருப்பூருக்கு பருத்தி நூலிழை பின்னலாடை உற்பத்தி தனி அடையாளமாக இருந்தாலும், இனிவரும் காலகட்டங்களில் மக்கள் எதிர்பார்க்கும் ஆடைகளை உற்பத்தி செய்ய, பாலியஸ்டர் ஆடை உற்பத்தியிலும் கால்பதிக்க வேண்டும் என்பதே உள்நாட்டு சந்தையாளர்களின் எதிர்பார்ப்பு. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்க தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது: சீனாவில் இருப்பது போல், கூடுதல் பிராசசிங் செய்த பாலியஸ்டர் ஆடை உற்பத்தியை துவக்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் வாரியாக உள்ள சந்தைகளில், மக்கள் விரும்பும் வகையில் ஆடைகளை வழங்க வேண்டும். மக்கள் விரும்பும் வகையில், புதிய வகை பேஷன் ஆடைகள் உற்பத்தி செய்யும் முயற்சியும் துவங்கி விட்டது. சூரத், லூதியானாவில், இதேபோல் பிராசசிங் ஆரம்பித்து விட்டனர். இவ்வகை துணிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்தோம். தற்போது, வட மாநிலங்களில் உற்பத்தியாக துவங்கிவிட்டது. நூலிழை உற்பத்தி வேகமெடுக்காததால், வெளிநாடுகளில் இருந்துதான் செயற்கை நூலிழை இறக்குமதி செய்து, துணி உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. துணி இறக்குமதிக்கு பதிலாக, நூலிழை இறக்குமதி செய்து, திருப்பூரிலேயே விரைவில் பாலியஸ்டர் பின்னல் துணி உற்பத்தி துவங்கப்பட வேண்டும். அப்போதுதான், அனைத்து ஜாப் ஒர்க் பிரிவுகளும் பயன்பெறும்; திருப்பூரும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியும். அரசு மானியம் சாத்தியம் உற்பத்தி பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் திட்டத்தில், மானியம் வழங்கி மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கின்றன. திருப்பூருக்கென, தனி கிளஸ்டர் உருவானால், நேரடியாக சில்லரை விற்பனையாளருக்கு மார்க்கெட்டிங் செய்ய மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்மூலம், திருப்பூரின் உற்பத்தி ஆடைகளை சந்தைப்படுத்தலாம். கூட்டு பிராண்ட் வாயிலாக, நாடு முழுவதும் விற்பனை ஷோரூம்களை துவக்கலாம். பின்னலாடை உற்பத்தியாளர்கள், உற்பத்தியில் கவனம் செலுத்துவது போல், மார்க்கெட்டிங் செய்வதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், திருப்பூர் நிறுவனங்கள் கிளஸ்டர் ஆக இணைந்து, பொதுவான பிராண்ட் வாயிலாக, புதிய தொழில்நுட்ப ஆடைகளை சந்தைப்படுத்த வேண்டும். நாடு முழுவதும், முக்கிய தொழில் நகரங்களில், உற்பத்தி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, நேரடியாக சில்லரை விற்பனையாளருக்கு விற்பனை செய்வது, லாபத்தை அதிகரிக்க செய்யும். நேரடி வர்த்தகத்தால், மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்ப உற்பத்தியை வடிவமைக்கலாம். சண்முகசுந்தரம், தலைவர், சைமா.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

